اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۙ‏ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَۙ‏

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்....

அத்தியாயம் 23    வசனம் 57 – 62 

நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் மீதுள்ளச்சத்தினால் அல்லாஹ்வின் வேதனையை எண்ணி அஞ்சுவார்கள். அவனுக்கு சதாகாலமும் வழிபட்டுக் கொண்டே இருப்பார்கள். மேலும் அவனது வசனங்களை நம்பிக்கை கொண்டு அவனது கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிந்து வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஒருவனுக்காக மட்டுமே நிறைவேற்றுவார்கள் அவ்வணக்கங்களில் எதையும் யாரின் நெருக்கத்தை அடைவதற்காகவும் நிறைவேற்றமாட்டார்கள். மேலும் கடமையான, உபரியான தர்மங்களை நிறைவேற்றினாலும் இறுதி நாளன்று அல்லாஹ்வை சந்திக்கப் போகிறோமே என்ற அச்சத்தினால் நாம் செய்த நற்கருமங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுமோ என்று அஞ்சுபவர்களாகவே கடமையான உபரியான தர்மங்களை நிறைவேற்றுவார்கள். இப்பேற்பட்ட தன்மையுடையவர்கள் தான் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய வேண்டும் என்று ஆர்வத்தோடு நன்மையான காரியங்களை துடிப்போடு நிறைவேற்றுவார்கள். மேலும் அல்லாஹ் மனிதனுக்கு விதியாகியிருக்கும் எந்த செயலாக இருந்தாலும் அவனது சக்திக்குட்பட்ட காரியங்களை தான் ஏவியிரிக்கிறான். அடியானின் எல்லா செயல்களும் கண்ணியமான வானவர்களால் அவை பதியப்படுகின்றன மனிதன் உலகில் செய்யும் எல்லாவித நல்ல, தீய செயல்களுக்கும் மறுமையில் தக்க கூலிகள் வழங்கப்படும். அவைகளில் நன்மை செய்தவர்களின் நன்மைகளை குறைப்பதன் மூலமோ தீயவர்களின் தீமைகளில் எதையும் கூட்டுவதன் மூலமுமோ அநீதம் இழைக்கப்பட மாட்டார்கள்.

இதற்கு முந்திய வசனத்த தொடரில் இணைவைப்பவர்களுக்கும்,  பாவிகளுக்கும் உலக செல்வங்கள் கிடைத்ததை வைத்து தாங்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்ததற்கான அடையாளங்களாக எண்ணி வருகின்றனர். உன்மையில் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்தவர்களின் அடையாளம், என்ன என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறான்.

تفسير المحرر

 

“ அவர்கள் தங்களது ரட்சகனை அஞ்சுவார்கள் ”. என்ற வாசகத்திலுள்ள பாடங்கள்.
1) அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் படிக்கும் போது, அல்லது யாரேனும் படிப்பதை செவியுறும் போது, அதை சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அதில் கூறப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் உயர்வான அழகிய பண்புகளை விளங்கி அவன் மீது நேசம் கொண்டும், அவனது கண்ணியத்தை உள்ளத்தில் ஏந்தியவர்களாகவும், மறுமை வாழ்வைப் பற்றியுள்ள சுபச் செய்திகளை கேட்கும் போதும், அவ்வாறே உலகில் படைக்கப்பட்டிருக்கும் படைப்பினங்களைப் பற்றி கூறியிருப்பதை சிந்திக்கும் போது, அவைகளில் எவ்விதமான மாற்றமில்லாமல் நடைபெறுவதை எண்ணி அவர்களின் இறை நம்பிக்கை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இவை அனைத்தும் அவர்களது ஈமானை வலுவூட்டக்கூடியதாகும் இந்த உணர்வை எழுத்துக்களால் எழுதிவிடவோ வார்த்தைகளால் வர்ணிக்கவோ முடியாது.


2 “ நாம் செய்த நற்கருமங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுமோ என்று அஞ்சுபவர்களாகவே நிறைவேற்றுவார்கள் ” என்பதன் மூலம் நன்மையான காரியங்களை செய்வதில் ஆர்வமும், ஆசையுமிருப்பது போல் அந்த நற்காரியங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுமோ என்ற அச்சமும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தினால் அவனது உயர்வையும் மேன்மையையும் கண்ணியத்தையும் உள்ளத்தில் ஏந்தியவர்களாக அவனது தகுதிக்கு தக்கவாறு நாம் அவனை முறையாக வணங்கவுமில்லை பாவங்களை விட்டு முழுமையாக தவிர்ந்திருக்கவுமில்லை இப்பேற்பட்ட குறைகளுடன் நாம் செய்யும் சிறிய சிறிய நற்காரியங்களும் வீணாகி விடுமோ என்று அஞ்சுவார்கள்.
تفسير سعدي


*ஹசனுல் பஸரி (ரஹ்) கூறினார்கள்:* நம்பிக்கையாளர் நன்மையான காரியங்களை செய்து அஞ்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நயவஞ்சகனோ எனக்கு எல்லாம் தெரியும் நான் ஞானம் கொடுக்கப்பட்டவன் என்று கூறி பாவத்தை செய்து கொண்டிருப்பான். என்று கூறிய பின் இந்த வசனத்தை ஓதி காண்பித்தார்கள். “ நாம் செய்த நற்கருமங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போய்விடுமோ என்று அஞ்சுபவர்களாகவே நிறைவேற்றுவார்கள் ”




 3 நல்லடியார்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்கும் அவனது வேதனையை விட்டும் தப்பிப்பதற்காக என்ன வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி. அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய அவை அனைத்திலும் முனைப்போடு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவார்கள்.

நன்மையான காரியங்களை செய்வதில் முந்திக் கொள்பவர்கள்  இந்த புகழுக்குறியவராகிறார்கள். அந்த நன்மையான காரியங்களில் முதன்மையானது தொழுகை யாகும் அதை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவது மிகப் புகழுக்குறியதாகும்.تفسير المحرر

 

0
Would love your thoughts, please comment.x
()
x