اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏ خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏

உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான்

புதுப்பித்துக் கட்டப்பட்ட புனித காஃபாவில் பல தெய்வ வழிபாடுகள் நடைபெற்று இருப்பதைக் கண்டு நபிகளார் சஞ்சலப்பட்டார்கள். மேலும் தம்மை, மக்கள் புகழ்ந்து கொண்டிருந்த உண்மையாளர் நம்பிக்கையாளர் என்ற புகழ்களை தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை. மாறாக அசத்தியத்தை எவ்வாறு அழிக்கலாம் என்ற சிந்தனையிலேயே இருந்தார்கள்.

மக்காவின் புறநகர் பகுதியில் மக்களின் சந்ததியற்ற சூழலில் விரும்பி அடிக்கடி தனிமையை மேற்கொண்டு வந்த நபிகளாரை அவர்களின் மனைவி கதீஜா அம்மையார் உணர்ந்து கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடமைகளை அவர்களோ அல்லது அன்னாரின் பணியாளோ எடுத்துச் சென்று கொடுப்பது வழமையாக இருந்தது. தனிமையை மேற்கொள்வது நபிகளாருக்கு மட்டும் புதிதல்ல இத்தகைய தியானம் அக்கால அரபியர்களுக்கோ நடைமுறையில் இருந்து வந்தது. நபிகளாருக்கு முன் சென்ற ஹனீஃப்களும் நற்சிந்தனையாளர்களும் இதே பழக்கத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
நபிகளாரின் இந்த தனிமை ஏறத்தாழ 3 ஆண்டுகள் நீடித்தது என்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தனிமைக்காக நபிகளார் தேர்ந்தெடுத்த இடம் ஜபலுந் நூர் ‘ஒலிக்குன்று’ என்ற மலையில் இருந்த ஹிரா என்னும் குகையாகும். இத்தனிமை போக்கின் போது ஒரு நாள் எங்கிருந்தோ ” அஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸூலல்லாஹ்” என்ற ஓர் அசரீரி சத்தம் கேட்டது.
அங்குமிங்கும் சுற்றிப் பார்க்கையில் எங்கிருந்தோ ஒரு சப்தம் வந்திருக்கின்றது யாராக இருக்கக்கூடும் என்று சிந்தித்தவர்களாக அச்சமும் ஆதங்கமும் மிகைத்து வீட்டிற்கு வந்து படுக்கைக்கு சென்றார்கள்.
உறக்கத்திலிருந்து விழித்தவர்கள் இனம் புரியாத ஓர் இன்ப நிலையும் அங்கிருந்த சுற்றுச்சூழலுக்கு அப்பாற்பட்ட கனவு காட்சிகளும் வந்து சென்றன. இதை கண்ட நபிகளார், தான் தேடும் உண்மையின் வெழிபாடாக இருக்குமோ என்று சிந்திக்கலானார்கள். இந்த கனவு காட்சிகள் சுமார் ஆறு மாதங்கள் நடைபெற்றதாக இபுனு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்.
நமது நபி (ஸல்) மின் தனிமை தியானம், நான்கடி நீளமும் ஒண்ணே முக்கால் அடி அகலமும் கொண்ட ஹிரா குகையில் தான் தூதுத் துவம் என்ற உயர்நிலையை அடைந்தது. அது ரமலான் மாதத்தின் 21ஆம் நாள் திங்கள் இரவு அவர்களுக்கு 40 வயதும் ஆறு மாதங்களும் 12 நாட்களும் நிரம்பி இருந்தது.
திடீரென்று வந்த வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) வேதத்தின் ஐந்து வசனங்களை ஓதி காண்பித்தார்கள். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நபிகளார் (ஸல்) விரைந்து வீடு திரும்பி நமது துணைவியரிடம் தம்மை போர்த்துமாறு வேண்டினார்கள்.

அருமையான ஆறு குணங்கள்.

திகைப்புடன் வந்த திருநபிக்கு அன்பு மனைவி, அவர்களின் அருமையான ஆறு குணங்களை கூறி ஆறுதலளித்தார்கள்.
1  உறவினரை அண்டி வாழ்கிறீர்கள். ஹம்ஜா அப்பாஸ் அபூதாலிப் அபூலஹப் ஆகிய உறவினர்களை சேர்ந்து வாழ்ந்தார்கள் இணைவைப்பில் உறுதியாக இருந்தாலும் தமது பெண் பிள்ளைகளை அன்னாரின் மக்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
2 உண்மை உரைக்கிறீர். நபிகளார் தமது வாழ்வின் எல்லா சமயங்களிலும் உண்மை உரைத்ததினால் அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையாளர் என்று புகழ் பெயர் கிடைத்தது.
3  வலுவிழந்தவர்களின் சுமையை தாங்குகிறீர். பெரிய தந்தை அபூதாலிப் ஏழ்மை நிலையை உணர்ந்து நபிகளார் அவரின் பாரத்தை குறைப்பதற்காக சிறுபிராயத்தில் கூலிக்கு ஆடு மேய்த்து வந்தார்கள்.
4  ஏழை எளியோருக்கு உதவுகிறீர். அடிமை நிலையில் இருந்த தம்மை வளர்த்து வந்த பரக்கா என்ற உம்மு அய்மனையும் தமது குடும்பத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்கள் அவர்களை சமூகத்திற்கு முன் மதிப்பு பெற வைத்தார்கள்.
5 விருந்தினரை கண்ணியப்படுத்துகிறீர். வெளியூரிலிருந்து பிள்ளையை தேடி வந்த ஜைதின் குடும்பத்தாரை தமது வீட்டில் தங்க வைத்து உபசரித்தது.
6 இறை வழியில் துன்பத்தை தாங்குகிறீர். கற்சிலைகளை வணங்கி வந்ததை கண்டு வெறுத்த நபிகளார் தமது இல்லற வாழ்வின் இன்பத்தை ஒதுக்கி வைத்து இறைவனை வணங்க சிரமத்தை தாங்கி தியானம் மேற்கொண்டார்கள்.

இயற்கைக்கு மாற்றமாக நிகழ்வுகள் நடக்கும் வேளையில் அறிவார்ந்தவர்களிடம் அதைப் பற்றி விளக்கம் கேட்பது மக்களின் வழமையாகும். இதன் காரணமாக திகைத்து நின்ற தனது கணவரான முஹம்மத் நபி (ஸல்) அவர்களை முந்திய வேதங்களை கற்றறிந்த வரக்கா இப்னு நவ்ஃபலிடம் அழைத்துச் சென்றார்கள் கதீஜா அம்மையார்.

நடந்ததை விவரித்துக் கூறிய பிறகு விவரமாக விளங்கிக் கொண்ட வரக்கா, முந்திய தூதரான மூசாவிற்கு தூதுத்துவத்தைக் கொண்டு வந்த அதே வானவர் தான் உம்மிடமும் வந்திருக்கின்றார். உம்மை மக்கள் பிறந்தகத்தை விட்டும் வெளியேற்றும் போது நானிருந்தால் உமக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார். இதனை கேட்டு நபிகளார் என்னையுமா ? என் மக்கள் வெளியேற்றுவார்கள் என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். ஆம் முன் வந்த அனைத்து தூதுவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது என்பதை விவரித்தார்.

பல வருடங்கள் கவலையோடு தியானம் மேற்கொண்ட நபிகளாருக்கு ஆறுதலாக இருந்த வானவரின் செய்தி மீண்டும் வர வேண்டுமே என்ற எதிர்பார்த்தவர்களாக பலமுறை அந்தக் குகையை நோக்கி சென்ற நபிகளாருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் மிகவும் கனத்த இதயத்துடன் சென்று கொண்டிருந்தபோது அதே தூதுவர் வழியில் சந்தித்து உண்மையில் நீர் இறை தூதர் தான் என்று ஆறுதலான வார்த்தையை கூறினார் இதனை செவியுற்ற நபிகளாருக்கு அமைதியும் ஆறுதலும் ஏற்பட்டது.
நபி வரலாறு 143- 152

தூதுத்துவம் அருளப்பட்டு  20 நாட்கள் கழித்து ஜின்களின் மீது ஏறி நட்சத்திரங்கள் எறியப்பட்டன.
நபி அவர்கள் நபியாக அனுப்பப்படுவதற்கு முன்பு ஜின்கள் வானில் நடைபெறுகின்ற அல்லாஹ்வின் கட்டளைகளை ஒட்டு கேட்டுக்கொண்டு ஒரு செய்தியை கேட்டால் அதில் ஒன்பது செய்திகளை சேர்த்து உலகில் பொய்களை பரப்பிக் கொண்டிருந்தார்கள் நபி அவர்கள் நபியாக அனுப்பப்பட்டு 20 நாட்களுக்குப் பிறகு அந்த ஜின்கள் வானை நோக்கி சென்ற பொழுது முதலாவதாக எரி நட்சத்திரம் அவர்கள் மீது எறியப்பட்டன இதனை பற்றி ஜின்களின் தலைவர் ஷைத்தானிடம் சொன்னபோது உலகில் ஏதோ ஒரு நிகழ்வு நடைபெறுகிறது அதை நீங்கள் தேடிப் பாருங்கள் என்று சொன்னான் தேடிப் பார்த்ததில் நபி அவர்கள் மக்காவில் இரண்டு மலைகளுக்கு மத்தியில் தொழுது கொண்டிருந்தார்கள் அதனை கண்ட ஜின்கள் சைத்தானிடம் இந்த செய்தியை கூறிய பொழுது இதுதான் நீங்கள் வானுலகம் செல்வதற்கு தடுக்கப்பட காரணம் என்று சொன்னான்.

0
Would love your thoughts, please comment.x
()
x